ஜெயமோகனின் (காந்தியும் இந்தியும்)

ஜெயமோகன் அவர்களின் 'காந்தியும் இந்தியும்' கட்டுரைக்கு எனது தத்து பித்து பின்னூட்டும் அதற்கு அவருடைய மதிப்பார்ந்த பதில்களும்

(பொருமையாக, எனது பின்னூட்டத்திற்கு பதிலளித்ததற்கு அவருக்கு மிக்க நன்றி)

http://jeyamohan.in/?p=4087

எனது மின்னஞ்சல்-

  1. தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் காந்தி அடைந்த நடைமுறை விவேகத்தால் தான் இந்தியை முன்மொழிந்தார் என்றே வைத்துக்கொள்வோம். எனது சொந்த ஊர் பழனியின் அருகே உள்ள பாலசமுத்திரத்தில் வாழும் ஒரு சாதாரண குடிமகனுக்கு இந்தியைக் கற்றுக்கொள்வதற்கும் ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதற்கும் என்ன வித்தியாசம் தெரியப்போகிறது? காந்தியின் நடைமுறை விவேகம் வட இந்தியர்களுக்கும் தேவநாகிரி பரிச்சயமான பகுதிகளுக்கும் வேண்டுமானால் எளிதாக இருந்திருக்கலாம்.
  2. நீங்கள் சொல்வது போல் கணிப்பொறியின் உதவியால் கனநேரத்தில் தமிழில் வாசிக்க முடியும் காலத்தில் இணைப்பு மொழி தேவை இல்லை தான். ஆனால் இந்த கணிப்பொறியும் நவீனமும் எதனால் முடிந்தது? இன்றைய கணிப்பொறிஉலகில் தமிழர்கள் அடைந்த முன்னேற்றம் (மொழியாக்க மென்பொருள் உட்பட) எதனால் முடிந்தது? ஆங்கிலத்தால் தான் என்பேன் நான். வரும் காலத்தில் ஆங்கிலம் தேவை இல்லை என்றால் அது பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமே! ஆங்கிலம் வேண்டாம் என்றால் நாம் இந்த வளர்ச்சியின் பாதையில் இருக்க முடியாதே?!
  3. நடைமுறை விவேகத்திற்கு ஆங்கிலத்தை அல்லவா முன்மொழிந்திருக்க வேண்டும்?
தங்கள் கருத்தை எதிர்ப்பார்க்கும்....

-செந்தில்
--------------------------------------------

அன்புள்ள செந்தில்

நான் சொல்லியிருந்த கருத்துக்களை இன்னும் கொஞ்சம் கவனத்துடன் நீங்கள்
புரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.

1. காந்தி அவர் உத்தேசித்த ஒரு கிராமசுயராஜ்ய அமைப்புகள் ஒன்றுடன் ஒன்று
தொடர்புகொள்வதற்கான மொழியாகவே இந்தியை முன்வைத்தார். அது ஆங்கிலமாக ஏன்
இருக்க முடியாதென்பதை மிக விரிவாக நான் என் கட்டுரையில்
சொல்லியிருக்கிறேன்.

2. ஆங்கிலம் நவீனத் தொழில் நுட்பத்தின் மொழி. காந்தி அந்த ஐரோப்பியத்
தொழில்நுட்பத்தை எதிர்த்தவர். அதற்கு மாற்றுகள் உண்டாகவேண்டும் என
வாதிட்டவர்.

3 அதேசமயம் அவர் ஆங்கிலத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவில்லை.அதன்
பயன்பாட்டை அவர் உறுதியாக்வே எப்போதும் முன்வைத்தார்

மற்றபடி நீங்கள் கேட்டிருப்பதற்கும் நான் காந்தி குறித்து
சொன்னவற்றுக்கும் என்ன சம்பந்தம் என்றே எனக்கு புரியவில்லை.

ஆங்கிலம் தேவை இல்லை என்று யார் சொன்னது? ஒரு நிபுணன் ஆங்கிலம்
கற்றுக்கொள்ளக் கூடாதென யார் சொன்னது?

எல்லாவற்றையும் விட மேலாக ஆங்கிலம் வழியாகத்தான் கணிப்பொறியைக் கற்க
முடியும் என எவர் முடிவெடுத்தது? ஆங்கிலம் தெரிதுதான் உலகம் முழுக்க
கணிப்பொறி கற்கிறார்களா என்ன?

காந்தி சொன்னது ஒன்றே. இந்தியாவில் கோடிக்கணக்கானபேருக்கு ஏற்கனவே
தெரிந்த மொழி இந்தி. ஆகவே ஓர் இணைப்புமொழியாக அது இயல்பாகவே இருக்கிறது -
அதை வைத்துக்கொள்ளலாம்.

இன்றும் இந்தியாவில் அகில இந்தியத்தன்மை கொண்ட எந்த ஒரு அமைப்பிலும்
இணைப்புமொழி இந்தியே. தொழிற்சங்கங்கள் வினியோக அமைப்புகள் போக்குவரத்து
அமைப்புகள் அனைத்திலும். பாலசமுத்திரத்தில் ஒரு லாரி டிரைவர் அகில இந்திய
லைசன்ஸ் உள்ள லாரி ஓட்டினால் இந்திதான் தெரிந்திருக்கும். அவனிடம்
நீங்கள் போய் உனக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்வதுதான் எளிது என்று சொல்ல
முடியுமா என்ன?

நான் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கவேண்டும் என நினைப்பவன். இந்திக்கு
அந்த இடம் தேவையில்லை என நினைப்பவன். அதற்கான காரணங்களே வேறு. அது மைய
அதிகார மொழியாக வற்புறுத்தப்படக்கூடாது என்பதனால்தான்

நடைமுறையில் இந்திதான் இந்திய இணைப்புமொழி. அது அவ்வாறே
இருந்துகொண்டிருக்கிறது. அதைத்தான் நடைமுறைவாதியான காந்தி சொன்னார்.

எதற்கும் கட்டுரையை மீண்டும் படியுங்கள்.

ஜெ
--------------------------------------------------

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
விரைந்து பதிலளித்தமைக்கு நன்றி!
உங்கள் கட்டுரை புரியாமல் எழுதியமைக்கு மன்னிக்கவும்.
காந்தி ஏன் இந்தியை முன்மொழிந்திருப்பார் என்று உங்கள் கருத்தினை எழுதியிருந்தீர்கள் என்று நினைத்து அவர் ஏன் ஆங்கிலத்தை முன்மொழிந்திருந்திருக்ககூடாது என்ற எனது ஐயத்தை/கருத்தை எழுதிவிட்டேன். ஒரு விவாதத்திற்காக தான் அப்படி எழுதினேன்.
மற்றபடி தாங்கள் கடைசியாக எழுதிய இது தான் என் சொந்த கருத்தும் -
"நான் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கவேண்டும் என நினைப்பவன். இந்திக்கு
அந்த இடம் தேவையில்லை என நினைப்பவன். அதற்கான காரணங்களே வேறு. அது மைய
அதிகார மொழியாக வற்புறுத்தப்படக்கூடாது என்பதனால்தான்"

நன்றி!
-செந்தில்

Comments

  1. Arumayaana urayaadal! Nalla tamizh padikka padikka inimaithaan!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Belize (Feb 2024)

Iceland - Land of Fire and Ice (August 2018)

Northern Lights Trip to Iceland (Feb 2019)